Sunday, March 20, 2011

ரண்டடக்கா

ஒத்தையடி பாதையில் போயிருக்கிறீர்களா? இப்பொழுதெல்லாம் வீட்டில் இருந்து இந்த ஒத்தையடிப்பாதையில் தான் பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும். மழை அதிகம் பெய்யும் இடம் கெர்லிங்கன் , இரண்டு பக்கமும் முட்கள் நிரம்பியிருக்கும் ஆனால் வெகு சீக்கிரமாக என்னை கொண்டு சேர்த்துவிடும். 92 க்கு காத்திருந்தேன்.


ஹாஃப்ட்பான்ஹாஃப் என்றால் முக்கிய ரயில் நிலையமாம் யாரோ சொன்னார்கள். அதிலிருந்து நேராக கோனிங்ஸ்ட்ராசே வந்து சேர்ந்தேன் ,பக்கம் தான் நம்மூர் கடைத்தெரு மாதிரி இருக்கும். மணி எட்டிருக்குமா? இருக்கலாம். கடைத்தெருவின் ஓரங்களில் பல்வேறு கலைஞர்கள் எதேனும் கருவியை வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவர் கிளியை தலையில் வைத்துக்கொண்டே சாக்ஸ்போன் வாசிப்பார் ,நாம் காசு போட்டோம் என்றால் கிளி கீக் என்று கத்தும். கண் தெரியாத இருவர் ஒரு பியானிஸ்ட்டுடன் வயலின் வாசிப்பார்கள் , சில மெக்சிக்க பாடகர்கள் பாடுவார்கள், அப்பறம் பெரிய வயலின் வைத்து ஒருவர் வாசிப்பார். அது அவர் உயரத்துக்கு இருக்கும்.

கோனிங்க்ஸ்ட்ராசேவில் இரண்டாவது இடதில் இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கினேன். கப் கேக்குகளுக்கென்று பரத்தியேகமாக ஒரு கடையுண்டு. அதன் வாசலில் எப்பொழுதும் ஒரு நாய் குட்டி இருக்கும் அதுக்கு நானும் எனக்கதுவும் சில நாட்களாக பரிச்சயம் ,கடந்து சென்றேன். செங்குத்தாக வரும் படிகளில் இறங்கினேன். அந்த சின்னத்தெருவை நான் வந்தடைந்த போது மணி 9 இருக்குமா? கம்மியாகத்தான் இருக்கும். அவன் அங்கு தான் அக்கார்டியோன் வாசித்துக்கொண்டிருப்பான் ,அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. தினமும்ப்போல் இன்றும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன். பத்து மணிக்கு மேல் பக்கத்து சந்தில் இருக்கும் ஒரு க்ளப்புக்கு போய் விடுவான் முந்தா நாள் எட்டிப்பார்த்ததில் அங்கே காமக்களியாட்டங்கள் நடக்கும் என்று தெரிந்து கொண்டேன். கண்ணை மூடி அக்கார்டியானை அதன் பைக்குள் சொறுகினான் ,எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகளில் பாட ஆரம்பித்தான் ,நானும் உடன் சேர்ந்து கொண்டேன் அவன் சொல்லும் வார்த்தைகளையே சொல்லிப்பாடினேன். பக்கத்தில் உள்ள பையிலிருந்து எனக்கதை கொடுத்தான். சில்லறைகளை பொறுக்கிக்கொண்டு கிளப்பை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

நான் அதை தடவிப்பார்த்தேன் ,குடுகுடுப்பை என்று சொல்லலாமா? இல்லை. இது வேறு சின்ன வயதில் இதே போல் ஒன்று பார்த்திருக்கிறேன் கைப்பிடி மாதிரி ஒரு குச்சு இருக்கும் அதன் மேல் குடுகுடுப்பைப்போல் உருண்டையாக ஒன்று.இரண்டு பக்கமும் நூலால் சின்ன ப்ளாஸ்டிக் பந்தை கட்டி விட்டிருப்பார்கள். கையை குவித்து அதை நடுவில் வைத்து உருட்ட ஆரம்பித்தேன் ரண்டட்டக்கா ரண்டட்டகா ரண்டட்டகா என்று சத்தம் போட்டது சிரிப்பாக வந்தது நிறுத்தவே முடியவில்லை. சுவற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன் ஹஹஹ்ஹா ரண்டடக்கா ரண்டடக்கா.

பேருந்து நிலையம் வரைக்கும் அதை வாசித்துக்கொண்டே போனேன். காலை முன்னே எத்தி எத்தி அதை வாசித்துக்கொண்டே ஹேய் ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டட்க்கா

அடுத்த காலை எத்தும்போதும் அதே ஹேய் ரண்டட்டக்கா ரண்டட்டக்கா ரண்டட்க்கா. பேருந்தில் யாரும் பார்த்துவிடக்கூடாதென்று கோட்டுக்குள் ஒளித்து வைத்தேன். ஒத்தையடி பாதியில் வீடு வந்தேன் ,வாசல் விளக்கு வேலை செய்யவில்லை. கதவை திறந்த நிமிடத்தில் படார் என்று மூடினேன் ,ஹே ரண்டடக்கா ரண்டடக்கா ரண்டடக்கா. கொஞ்ச நேரத்தில் சோர்வடைந்து விட்டேன்
92 இல் இருந்து இறங்கினேன். உள்ளே போக எனது அடையாள அட்டையை காட்ட வேண்டும் ,பெருநிறுவனம் அது. சில நாட்கள் முன்பு வந்து சேர்ந்த பொழுது அன்னாந்து பார்த்த கட்டிடங்களை இப்பொழுது பார்ப்பதில்லை. நீலத்திமிங்கலத்தின் வாய்க்குள் போவது போன்ற உணர்வை அந்த ஆட்டோமேட்டிக் கதவுகள் ஏனோ தருகின்றன. என் அறைக்கு போகும் முன்பு நான் வந்தேன் என்று ஒரு மெஷினிடம் சொல்ல வேண்டும்.8.34 க்கு வந்திருக்காய் என்றது. என் கணிணியில் இன்று செய்ய வேண்டியவற்றின் அட்டவனையைப்பார்த்தேன் , அது இருந்தது.

வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டேன் ,எனது கைகள் அளவுக்கு நீல நிற க்ளவுசை தேடியெடுத்துப்போட்டேன். அந்தப்பொடியை அளவெடுத்தேன் , அதை ஓங்கி அழுத்தி மாத்திரையாக்கும் வேலை , மெஷின் செய்யும். இங்கே அங்கே கொட்டி தொலைத்தது பொடி , கடிந்து கொண்டேன். பொடியை ஒரு சின்ன அளவிலான பாத்திரத்தில் போட்டேன். பாத்திரம் என்றால் பால் பாத்திரம் மாதிரியில்லை மேலும் கீழும் கொஞம் குண்டான ஸ்டீல் கம்பிகளால் மூட வேண்டும் ஆனால் கம்பிகளால் நிற்காது ,அதனால் அதை தாங்கிக்கொள்ள ஒரு நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்.நாற்காலியோடு கொண்டுபோய் அந்த அழுத்தும் இயந்தரத்தில் வைத்தேன். மேலிருந்து ஒரு பெரிய உருண்டை இரும்பு இதை அழுத்தும் , அதை ஏற்றி இறக்க கால் பக்கத்தில் பெடல் இருக்கும். ஒரு அழுத்து அழுத்தியாகிவிடின் அது அப்படியே நின்று கொள்ளும் , நாற்காலி தேவையில்லை பிறகு மெஷினாக அதை அழுத்த நாம் சில கட்டளைகள் கொடுத்தால் போதும்.

முடிந்தவுடன் எடுத்து பார்த்த பொழுது மாத்திரை உடைந்தார்ப்போல் வந்திருந்தது , பொடியைத்த்யாரிக்க எவ்வளவு நாட்கள் ஆயிற்று தெரியுமா என்று கத்தினேன் ,வாயைத்திற்க்காமல் என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து ஒருவன் வந்து பார்த்து சிரித்துவிட்டு போனான். நானும் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தேன். அடுத்த முறை செய்த பொழுது வடிவாக மாத்திரையை கொடுத்திருந்தது ,வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தேன் மூஞ்சியை திருப்பிக்கொள்வது போல் நாற்காலியிலிருந்து சரிந்தது.

ஏழாவது மாத்திரைக்கு பிறகு ஸ்டீல் கம்பியை தனியாக பிரித்தெடுக்க முடியவில்லை ,ஏன் என்றேன் மீண்டும் வரமாட்டேன் என்றது. தண்ணீர் ஊற்றிக்கழுவினேன் உள்ளே சிராய்ப்புகள் இருந்தது. சின்ன பேப்பரை நன்றாக சுருட்டி அதன் உள் அழுக்கை நீக்கினேன் ,தண்ணீர் ஊற்றி மீண்டும் கழுவியபொழுது முழுச்சாப்பாடு சாப்பிட்ட திருப்தியில் இருப்பவனைப்போல் காட்சிகொடுத்தது. என்னை சாப்பிட அழைத்துச்சென்றார்கள்.
சாப்பிட்ட பிறகு ஒரு நடை நடப்பது அங்கே வழக்கம். முன்னே போகும் பெண்ணுக்கு மிக நீளமான தலைமுடி என்றான் பெர்ண்ட். அவள் இந்தியப்பெண் என்றான் ஃப்ரான்க். எப்படித்தெரியும் இது பெர்ண்ட். அவள் பெண்ணாயிற்றே , இந்த பில்டிங்கில் இருக்கும் அனைத்து இளம்பெண்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன் என்றான். பொதுவாக இந்தியப்பெண்கள் இப்படி முடி வைத்திருப்பார்களா என்று கேட்டான் ,தெரியாது என்றேன். உனக்கு என்ன எழவுதான் தெரியுமோ என்று முனுமுனுத்தான். நான் அவர்களை விட்டு வேகமாக நடந்திருக்கிறேன் என்பதை வேலையிடத்துக்கு வந்ததும் உணர்ந்து கொண்டேன். பாத்திரம் காய்ந்து விட்டிருந்தது. அதை மீண்டும் இன்று அழுத்த மணமில்லை.

அவன் அங்கே தான் இன்றும் உட்கார்ந்திருந்தான் ,வழக்கம் போல் ஆள் அரவமில்லை. இன்று கூடதல் குதூகலத்துடன் எனது ரண்டட்டக்காவை எடுத்து வாசித்து காமித்தேன் அவன் குதிக்க ஆரம்பித்தேன் ,சிறிது நேரம் ஆடிவிட்டு நகர்ந்துவிட்டான் ,அவன் பின்னே சென்றேன். வராதே என்று கத்தினான் ,நான் அதை ஆட்டிக்கொண்டே அவனை அடைந்தேன்.க்ளப் வந்துவிட்டது. அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே அதை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் காலைஆட்டுகையில் என் கையிலிருந்து அதைப்பிடுங்கி அதன் மேலேறி குதிக்க ஆரம்பித்தான் எனக்கு வந்த கோபத்தில் அவனை கீழே தள்ளி விட்டேன். அதை மங்கலான வெளிச்சத்தில் பார்த்தேன் ,முழுவதுமாக சப்பளிந்திருந்தது நூல்கள் அறுபட்டு போயிருந்தன. அழுகையை அடக்கிக்கொண்டு தேவுடியாப்பைய்யா என்று தமிழில் திட்டினேன் ,அவனுடன் இப்பொழுது இன்னும் சிலர் இருந்தார்கள் ஒருவன் என் கையை ஓங்கி மிதித்தான் , நான் மிச்சமிருந்ததை பொறுக்கிக்கொண்டு வலப்பக்கம் இருக்கும் குறுக்குச்சந்தில் ஓடி வந்துவிட்டேன்.பின்னால் யாரும் வரவில்லை.
இன்றும் வாசல் விளக்கு வேலை செய்யவில்லை ,கதவைப்பூட்டாமல் எனது மெத்தைக்கு வந்தேன் கொஞ்ச நேரம் விசும்பியிருப்பேன் போல ,பிறகு தூங்கிவிட்டேன்.

காலை 8.43 க்கு வந்திருக்கிறாய் என்றது மெஷின் ,நன்றி சொல்லாமல் நடந்தேன். அட்டவனை மாறவில்லை , 50 மாத்திரைகள் தயாரிக்க வேண்டுமே! மீண்டும் பாத்திரத்தை வெளியில் எடுத்தேன். இனிமேல் அவனை பார்க்கப்போவதில்லை என்றேன் ,சரி என்பது போல் பதில் சொல்லியது. நேற்றே வேலையை முடித்திருக்கலாமே என்று ஒரு குரல் ,எனது மேற்பார்வையாளருடையது. முடித்திருக்கலாம் தான் ஆனால் 10க்கு மேல் தொடர்ந்து இதை அழுத்தினால் இதற்க்கு காயங்கள் ஏற்படுகின்றன சிறிது ஓய்வுத்தேவை என்றேன். உனக்கா என்றார் ,இல்லை சொன்னேனே இதற்க்குத்தான் ஓய்வு. அதற்க்கென்ன உயிரா இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே கேட்டார். எனக்கு அவர் கேட்ட கேள்வி புரியவில்லை.

Thursday, January 20, 2011

வகுப்பறை

இன்றுடன் *அஃபீஷியலாக* எனக்கும் வகுப்பறைகளுக்குமான உறவு முடிகிறது.கொஞ்சம் தல்லாஞ்சு மனசு கிடப்பதால் இந்த பதிவு.(உங்க கெட்ட நேரம்)

வகுப்பறைகளுக்கும் எனக்குமான வரலாற்று உறவு நான் 3 வயதில் இருக்கும்போது ஆரம்பித்தது.முதல் நாளே சரித்தரத்தில் என்னை என் நண்பன் விஜயகுமார் இடம்பெற வைத்தான்.எல்லோரிடம் வரிசையில் வந்து பெயர் கேட்டான்.உயரமாக இருப்பதால் நான் கடைசி பெஞ்ச் ,என்னிடம் வந்து கேட்டபொழுது என் பெயரை எப்படி உச்சரித்து தொலைத்தேன் என்று தெரியவில்லை ,அவனுக்கு அது வெறியேத்திவிட்டதா என்றும் இன்றளவிலும் புரியவில்லை.நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று நிமிடங்கள் ரத்தம் வரும் வரை கடித்து வைத்தான்.நான் அலறக்கூடவில்லை அவன் கடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த நினைவு.அப்பறம் ஆயாம்மா வந்து எனக்கு மருந்து போட கூட்டிக்கொண்டுபோக இவன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான் , என்னை அம்போவென்று விட்டுவிட்டு இவனை அரை மணி நேரம் சமாதானப்படுத்தினார்கள்.

விளையாட்டுகளில் முன்பு ஆர்வம் இருந்தது.அம்மாவின் முழு ஈடுபாட்டால் தமிழ்/ஆங்கிலம் இரண்டு பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்வார் சிறு வயதிலிருந்து.ஒரே ஒரு கோட் மட்டும் தான் சொல்வேன் திரும்ப திரும்ப (ராபர்ட் ஃப்ராஸ்டின் Woods are lovely) அதை சிறு வயதில் இருக்கும்போது அம்மா அபினயம் பிடித்து சொல்லி காட்டுவார்.அதையே விவரம் தெரியும் முன்வரை பயன்படுத்தியும் வந்தேன்.பேச்சுப்போட்டி என்றால் நீங்கள் தூத்துக்குடி எட்டையபுரம் மற்றும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப்போய் வரலாம் ,பஸ் பிராயணம் என்றால் எனக்கு அலாதிப்பிரியம்.அதுபோக கைதட்டு சின்ன வயதில் பிடித்திருந்தது.கலை இலக்கிய இரவுகளுக்கு குடும்பத்தோடு போவதால் அதில் வரும் சிலரை பார்த்து பலகுரல் கற்றுக்கொண்டேன்.சரியாக வராவிடினும் அப்ப்போதைக்கு அப்போ ஒன்றிரண்டு வொர்க் அவுட் ஆகும்.


இதுக்கும் வகுப்பறைக்கும் சம்பந்தமே இல்லை தான்.ஆனால் இவை தான் சிறு வயது நினைவுகளாக இருக்கின்றன.என்னால் வகுப்பில் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்துவிட முடிந்திருக்கிறது.யோசிக்க வைக்கும்படியான கேளிவகளுக்கு பதிலே அளிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பேன்.8ஆம் கிளாஸ் வரை ஹிட் அண்ட் ரன் வகையான அறிவாக வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு வேதியல் ஒன்றுமே புரியவில்லை என்று அப்பா வனமூர்த்தி சாரிடம் சேர்த்து விட்டார்.19 வருட படிப்பில் நான் நன்றிக்கடன் பட்டிருப்பத்தாக நினைக்கும் ஒரே நபர்.வெறும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி,உத்தியோகமோ வங்கியில் . காலை மாலை ட்யூஷன் .எளிமையாக சொல்லித்தருவார்,ஒன்று விடாமல்.அவருக்கு தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை அற்புதமாக விளக்குவார்,தெள்ள்த்தெளிவான புரிதல் இருந்தது அவரிடம்.அதை அப்படியே நம் மனதுக்களிக்கும் வல்லமையும் இருந்தது.படிப்பில் ஒரு வகையான பற்றும் ஏற்பட்டது.10 ஆம் கிளாஸ் வரை வேதியலை விருப்பப்பாடமாக கொண்டு படித்து வந்தேன்.


+1,+2 எரிச்சல் மிகுந்த ஆண்டுகள்.திருச்சங்கோடின் (வித்யாவிகாஸ்) வாழ்க்கையைப்பற்றியும் அதில் ஏன் குழந்தைகளை சேர்க்கக்கூடாது என்ற அபாயத்தைப்பற்றியும் ஒரு தனி பதிவே எழுதலாம்.அதுவரை அல்லாத அதிகப்பணம் கொடுத்து படித்தது அப்பொழுது தான் (இரண்டு வருஷத்துக்கு எல்லாம் சேர்த்து 80000 வரலாம்) அது ஒரு டார்ச்சர் ஹவுஸ் எல்லாரையும் வாயில் டியூப் போட்டு ஏத்துவது மாதிரி படிப்பை ஏற்றிவிடுவார்கள்.அப்பொழுதும் இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு வனமூர்த்தி சாரிடம் வந்து தனியாக வேதியல் கற்றேன்.

வகுப்பறை படிப்பு மட்டுமே என் வாழ்க்கையாக இருந்து வந்திருக்கிறது இதில் நான் செய்யாமல் விட்டவை மிக அதிகம். எப்படியாக இருந்திருக்கலாம் என்று இப்பொழுது ஒரு ஆசை வருகிறது .இவையெல்லம் என் எண்ணங்களே ,பலவற்றுக்கு என்னிடம் இப்பொழுது தெளிவான தர்க்கம் இல்லை.ஆனால் இப்பொழுது இருக்கும் புரிதலை வைத்து சிலவற்றை எழுதுகிறேன்.இதில் சிலவற்றை பெற்றோர்களுக்கான வேண்டுதலாகவும் வைக்கிறேன்.நான் தற்சமையும் அறிவியல் சார்த்து இயங்கி வருவதால் அதன் பார்வை அதிகமாக இருக்கும்.பொதுமைப்படுத்த முயற்ச்சிக்கவில்லை.


முதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.பின்னால் என் தர்க்கத்தை அளிக்கிறேன்.ஒரு சின்ன கேள்வி மட்டும் இப்பொழுது,போன வருஷம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் நினைவில் இருக்கிறாரா உங்களுக்கு? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது?

வெற்றி தோல்விக்கான விளக்கங்கள் ஆளுக்காள் மாறுபடும்,மதிப்பெண்ணை யார்ட்ஸ்டிக்காக வைத்து இயங்கிக்கொண்டிருப்பது என்னளவில் ஆரோக்கியமான சூழல் இல்லை.என் துறையில் அறிவியலில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே நடந்துவிடவில்லை.இத்தனைக்கும் 50களில் மின்வேதியலில் விற்ப்பன்னர்களை கொண்டிருந்த நாடு இது.


நான் செய்த தவறாக நினைப்பது ஒரு உள்ளார்த புரிதலே இல்லாமல் படித்து படித்து மேலே வந்ததைத்தான் (எல்லாவற்றிலும் இல்லை).எல்லாவற்றுக்கும் அடிப்படைகள் முக்கியமானவை.கொஞ்ச நாள் முன்னாடி circumference என்றால் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சுற்றளவு என்ற தமிழ் வார்த்தை தெரியாது. circumference என்றால் அதன் சூத்திரம் மட்டும் மண்டையில் வந்து நிற்கிறது.குழந்தைகளுக்கு அனைத்தையும் மண்டையில் தினிக்கத்தேவையில்லை.நினைவாற்றலை விட அவர்கள் புலன்களுக்கும் ஒரு உள்ளார்ந்த பிரக்ஞையை உண்டாக்கும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டும்.மேலே போகும்பொழுது அவர்கள் இந்த சின்ன சின்ன புரிதல்களைதான் அஸ்திவாரமாக வைத்து உள்வாங்கிக்கொள்வார்கள்.


காரணம் இல்லாமல் ஒன்றுமே இருந்துவிடாது.ஒரு நிகழ்வுக்கோ ஒரு இருப்புக்கோ ஒரு ரசாயன மாற்றத்துக்கோ காரணங்கள் இருக்கும்,இது நடக்குது என்று சொல்லிக்கொடுக்க படிப்பு தேவையில்லை.மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கிறோம் நாம் அங்கே! ஐரோப்பியாவில் வந்து இரண்டு நாட்டு கல்விமுறைகளில் நான் பார்த்தது ,அங்கே எந்த மாணவனும் கேள்வி கேட்காமல் சும்மா தகவல்களாக (facts) எதையும் ஒப்புக்கொள்வதில்லை,கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது.ஏன் நிகழ்கிறது எந்த குணமிருந்ததால் இவ்வகையான மாற்றம் நிகழ்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு நாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களைத்தாண்டி சிலவற்றை நிகழ்த்திக்காட்டலாம்.


சிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.

இவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை.இருந்தாலும் ஐரோப்பிய பாடத்திட்டங்களைப்பற்றி இன்னும் விரிவாக எழுத எண்ணம்.இதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தெரிவியுங்கள்.உபயோகமாக இருந்தது என்று தோன்றினால் மேலும் எழுதுகிறேன்.

Saturday, July 17, 2010

Inception 2010 கதை/விமர்சனம்.


பொதுவாகாவே எனக்கு அறிவியல் புனைவுகள் பிடிக்காது ,ஆக இது நான் விரும்பிப்பார்க்கும் ஒரு வகை படமல்ல.ஆனால் நோலன் தனது சிருஷ்டியால் நமது மூளைக்குள் சதுரங்கம் ஆடியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல , ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சில கேள்விகளை எழுப்பிவிட்டு விடை தேடும் முன் அடுத்தகட்ட நகர்வுக்கு தாவும் திரைக்கதை யுக்தி ,கனவுகளுக்குள் இருக்கும் நிஜங்களையும் , நிஜங்களுக்குள் இருக்கும் கனவுகளையும் ஒரு பிரிவின் மூலம் இதில் அவர் சொல்லியிருப்பதே இந்த படத்தில் என்னை பாதித்த விஷயம்.

இப்பொழுது கதை ,முதல் சீனில் சில பாதுகாவலர்கள் காப்பை ( டீ காப்ரியோ) ஒரு வயதான முதியவரிடம் அழைத்து செல்கிறார்கள் அங்கே ஒரு உரையாடலுக்கு பிறகு வெட்டிவிட்டு காப் , அர்தர் ( காப்பின் அணியில் ஒருவன்) மற்றும் சைடோ ( ஒரு தொழிலதிபர்) மூவரும் சாப்பிடும் ஒரு காட்சி வருகிறது.காப் கனவுக்குள் நுழைந்து ஆழ்மன ரகசியங்களை திருடும் வல்லமை படைத்தவன்.சைட்டோவின் ரகசியத்தை கண்டறிய ஒருவரிடம் காசு வாங்கிவிட்டு அவரின் கனவுக்குள் வருகிறான் , அங்கே அவன் தனது ஆழ்மன ( sub-conscious) உருவைமாவான (projection) தனது மனைவியை காண்கிறான்.அவளை கட்டிபோட்டு விட்டு ரகசியம் இருக்கும் லாக்கரை நெருங்கும் பொழுது மால் ( காப்பின் மனைவி) ஆர்தரை சுட்டு விடுகிறாள் அப்பொழுது தான் சைட்டோ சொல்கிறான் நாம் இருப்பது ஒரு கனவென்று.ம்ம் ஹ்ம்ம் ஒரே குழப்பமா இருக்கா? கஷ்டமில்லை ,சில விஷயங்கள் நோலன் விளக்க நேரம் எடுத்து கொள்கிறார் , எல்லா அறிவியல் புனைவுகளுக்கும் தனக்கென்று சில நியதிகள் இருக்கும்.அது போலவே இதுக்கும் , அதை முதலில் பார்த்துவிட்டால் பின்பு எளிது.

உருவமைவு என்றால் என்ன? (Projection)

*எல்லா கனவுகளுக்கு ஒரு சப்ஜெக்ட் இருப்பார் , அவரால் உருவாக்கபடும் கதாபாத்திரங்கள் தான் உருவமைவுகள் .

*கனவில் ஒருவர் இறக்க நேரிட்டால் பெரிய பாதகமில்லை , அவர் நிஜ வாழ்க்கையில் விழித்துக்கொள்வார்.

*கனவுகளை கட்டமைக்க ஒரு சிற்பி உண்டு ,நிஜத்தில் கனவுகளை வடிவமைத்து கனவு காண்பவர்களுக்கு அதை சொல்லிக்கொடுப்பவர் அவர்.

*டோட்டம் - ஒரு தாயமாக இருக்கலாம் ஒரு மூடியாக இருக்கலாம்.இதை நீங்கள் நிஜ உலகத்தில் சுத்திவிட்டீர்கள் என்றால சுத்திவிட்டு நின்றுவிடும் , கனவுலகில் நிற்காமல் சுத்தும்.இதை கனவில் அல்லது நினைவில் இருக்கிறீர்களா எனக்கண்டறிய ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.

*புதிர்நெறி ( maze) என்பது கணவுகளின் கட்டம்.இது போல எண்ணற்ற கனவுகளை ஒரு சிற்பியால் அமைக்க இயலும்.

* நிஜ உலகில் ஐந்து நிமிடம் என்பது கனவுலகில் 1 மணி நேரம்.முதல் நிலை கனவில் ஐந்து நிமிடல் என்பது இரண்டாம் நிலை கணவில் 1 மணி நேரம்.எக்ஸ்பொனன்ஷியலாக இவ்வாறு கூடிக்கொண்டே போகும்.

*கனவுக்குள் கனவு அதனுள் கனவு என்று எண்ணிக்கையே இல்லாமல் கனவுகள் கானலாம் , முதல் தளத்தில் கனவு காண்பவர் இரண்டாம் தளத்திலும் காண முடியாது.அவ்வளவே.இது போக இன்னும் சில உள்ளன , போகும் போக்கில் பார்க்கலாம்.

சைட்டோவிடம் இருக்கும் ரகசியத்தை திருட நினைத்து அவரை கனவு காண வைக்கிறாரன் காப் , அந்த கனவுக்குள் நடக்கும் கனவு தான் மேலே சொன்ன பத்தி.ஆர்தரை மால் சுட்டு கொல்வதால் அவர் விழித்துக்கொள்கிறார் எவ்வளவு முயன்றும் சைட்டோவின் முக்கியமான ரகசியத்தை காப்பால் அறிந்து கொள்ள முடியவில்லை ,கடைசியில் தப்பி செல்கிறார் ( அட , நிஜத்தில் தான்)

காப்பால் அமேரிக்காவில் தங்க இயலாது.மால் தற்கொலை செய்ததற்கு காப் தான் காரணம் என்று சந்தேகமுள்ளது.சைட்டோ காப்பை கண்டுபிடித்து விடுகிறான் அவனிடம் தொடக்கம் (inception) என்னும் ஒரு திட்டதை செய்துகொடுக்குமாறு சொல்கிறான்.தொடக்கம் என்பது ஒரு சிந்தனையை விதைக்கும் காரியம் ( to plant an idea) லேசாப்பட்டதில்லை , அது நடக்காத விஷயம் என்று ஆர்தர் மறுக்க ,காப் இது செய்ய முடிந்த ஒன்று என்று திட்டத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.
இதற்க்கென்று காப்புக்கு மூவர் தேவைப்படுகிறார்கள் , ஒருவர் தன் தந்தையிடம் படிக்கும் மானவியான அரிடேன்.இவள் ஒரு தலை சிறந்த சிற்பி.இன்னொருவன் ஏம்ஸ் , இவனால் கனவுக்குள் மற்றவரை போல் உருமாற முடியும் (impersonate) கடைசியில் யூசூப் , அதிக நேரம் தூங்க வைக்க ஒரு விதமான மருந்தை ( sedative) வைத்திருப்பவன்.

இதில் ஆர்டேனுக்கு பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.அவள் கனவுகளை கட்டமைக்க கற்றுக்கொள்கிறாள் , எப்படி ஒருவர் மற்றொருவர் கனவில் தனது ஆழ்மனத்தை கொண்டு வர இயலுமென காப் விளக்குகிறான்.அப்பொழுது காப்பின் ஆழ்மனத்தின் காரணமாக மீண்டும் மால் வருகிறார் , அட்ரீனை தாக்குகிறாள் அவள் திடுக்கிட்டு விழித்துகொள்கிறாள்.

பிறதொருமுறை காப்பின் கனவுக்குள் நுழைகிறாள் அர்டேன் ,காப் கனவு முழுவதும் மால் இருக்கிறாள் , நினைவுகளாக.இல்லாத ஒருவரை நாம் நினைவில் தானே சிறை வைப்போம்? அப்படி தனது காதலியை தன் நினைவில் சிறை வைக்கிறான்.எனக்கு படத்திலேயே இது பிடித்த பகுதி , காப்பால் ஒரு கனவை கட்டமைக்க முடியாத காரணத்தை அர்டேன் கண்டுகொள்கிறாள் , அவனின் கனவும் கனவுக்குள் இருக்கும் நினைவும் அவனது காதலி தான்.தன்னால் எந்த கனவையும் தனது காதலி இல்லாமல் கட்டமைக்க முடியாத நிலையில் காப் இருக்கிறான்.தொழிலுக்கு இது பலத்த ஆபத்து , இதை மற்றவர்களிடம் சொல்லுமாறு அர்டேன் வலியுறுத்துகிறாள்.இது ஆபத்து என்பதால் அவன் சொல்ல மறுக்கிறான்.இத்தோடு அவர்கள் தங்களது திட்டத்துக்கு தயாராகிறார்கள்.

திட்டம் இது தான் , ஃபிஷர் என்னும் ஒரு மாபெரும் பணக்காரன் அவனுக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியம் அதில் அவன் தந்தை இறந்து விட அவன் காட் ஃபாதருடன் இருக்கிறான் , தனது சாம்ராஜ்ஜியத்தை தானே சிதைத்துக்கொள்ளும் ஒரு சிறு சிந்தனையை அவன் தலைக்குள் போட வேண்டும்.விமானத்தில் 10 மணி நேரம் ஒன்றாக செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கிறது.

முதல் கட்ட கனவில் அனைவரும் ஃபிஷரை கடத்துகிறார்கள்.ஃபிஷரின் ஆழ்மனம் கனவுத்திருட்டுக்கு வருபவரை எதிர்க்க தயார்செய்யப்பட்டுள்ளது.அதனால் துப்பாக்கி ஏந்தி இவர்களை ஃபிஷரின் ஆட்கள் தாக்குகிறார்கள் , இதை கண்டுபிடித்திருக்க வேண்டியது ஆர்தரின் கடமை
அதை சரிவர செய்யாததால் ஆர்தர் மேல் கோபம் கொள்கிறான் காப்.இதனூடே தாக்குதலில் சைட்டோக்கு பலத்த அடி , அவனை கொன்று விடலாம் விழித்துக்கொள்ளட்டும் என ஆர்தர் சொல்கிறான்.

அப்பொழுது தான் காப் ஒரு ரகசியத்தை வெளியிடுகிறான் , இந்த முறை மருந்து கொஞ்சம் வலுவானது கொல்லும்பட்சத்தில் விழித்துக்கொள்ளப்போவதில்லை , எந்த கனவு நிலையில் யார் இறந்தாலும் அவர்கள் முழுமறதி நிலை ( limbo) என்னும் சூனியத்திற்கு போய்விடுவார்கள்.கனவிலிருந்து எந்திரிக்கும் பொழுது அவர்களுக்கு மனம் பிளாங் அவுட் ஆகியிருக்கும்.இதை கேட்ட அனைவரும் கோபம் கொள்கிறார்கள் , வேறு வழியின்றி மீண்டும் திட்டத்தை தொடர்கிறார்கள்.

ஈம்ஸ் , ப்ரொவுனிங் ( ஃபிஷரின் காட்ஃபாதர்) போல் உருமாறிக்கொண்டு தன்னை இவர்கள் துன்புறுத்துவதாக சொல்லி ஃபிஷரிடம் போகிறான்.இருவரையும் கட்டிப்போடுகிறார்கள்.ப்ரொவுனிங்க் ஃபிஷரின் தந்தை வேறொரு உயில் எழுதி வைத்ததாகவும் அதில் இந்த சாம்ராஜ்ஜியத்தை கலைக்க சொன்னதாகவும் சொல்கிறான் , தன்னுடைய சொந்த உழைப்பில் இன்னொன்று உருவாக அவனது தந்தை ஆசைப்பட்டார் என்றும் சொல்கிறான்.ஃபிஷரின் ஆட்களின் தாக்குதல் அதிகமாகிறது ,அடுத்த கட்ட கனவுக்கு இவர்கள் தயாராகிறார்கள்.முதல் கனவு யூசூப்புடையது.

இரண்டாம் கட்ட கனவு ஆர்த்தருடையது , ஆர்த்தரும் அர்டேனும் சேர்ந்து வடிவமைத்தது.இரண்டாம் கட்ட கனவு ஒரு ஹோட்டலில் நடக்கிறது , அங்கே ஃபிஷர் கனவில் இருப்பதாக காப் அவனிடம் சொல்கிறான் , அவனை காப்பாற்ற வந்ததாகவும் சொல்கிறான் , இந்த கடத்தலுக்குப்பின் ப்ரொவுனிங் இருக்கலாம் என்னும் சந்தேகத்தை ஃபிஷரின் தலைக்குள் விதைக்கிறான்.ஃபிஷரின் சொந்த மனம் ப்ரொவுனிங்கை கெட்டவனாக காட்டுகிறது , ஆக ப்ரொவுனிங்கின் ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள கனவு கான்போம் வா என்று அப்துல் கலாம் போல் அடுத்த கட்ட கனவுக்கு ஃபிஷரை தயார்படுத்துகிறான் காப்.ப்ரொவுனிங்கின் கனவுக்குள் செல்வதாக சொல்லி அழைத்துசெல்கிறார்கள்.மூன்றாவது கட்ட கனவு ஈம்சினுடையது.

மூன்றாம் கட்டம் ஒரு பனிமலையில் நடக்கிறது , ப்ரொவுனிங்கின் ஆட்கள் தாக்க வருவதாக ஃபிஷரின் ஆழ்மனம் உருவமைக்கிறது.இங்கே மால் வருகிறாள் , அவளை கொல்லவும் முடியாமல் காப் தடுமாறுகிறான்.அவள் ஃபிஷரை கொன்று விடுகிறாள் , இனி ஆட்டம் அம்பேல் என முடிவு செய்கிறார்கள் , இல்லை இன்னுமொரு ஆழத்துக்கு சென்றால் அவனை மீட்டெடுக்கலாம் என்கிறாள் ஆர்டேன்.அவள் கனவு கான்கிறாள்.சைட்டோவும் இறக்கிறான்.

நான்காம் கட்டம் தான் முக்கிய திருப்பமே , மீண்டும் மால்லை எதிர்கொள்கிறான் காப்.உண்மையை சொல்கிறான் , மாலும் காப்பும் கனவின் அடி ஆழத்துக்கு சென்று பல காலம் வாழ்ந்து வருகிறார்கள் இது கனவென்றே மாலுக்கு தெரியாமல் இருக்கிறது.அவளுக்கு புரிய வைக்க அவள் தலைக்குள் இது உண்மையான நிலை இல்லை என இன்ஷெப்ஷன் செய்கிறான் காப்.இதனால் தான் இன்ஷெப்ஷன் சாத்தியம் என்றும் காப்புக்கு தெரியவருகிறது.துருதஷடவசமாக அவள் நிஜத்திற்க்கு வந்தும் இது அழியவில்லை நாம் கனவில் இருக்கிறோம் என்றே நினைத்துக்கொள்கிறாள்.இதன் காரணமாக தற்கொலையும் செய்துகொள்கிறாள்.இந்த உண்மையை சொல்லும்போது (நான்காம் கட்ட கனவில்) காப்பை குத்திவிடுகிறாள் மால் , அர்டேன் மாலலை சுட்டுவிடுகிறாள்.ஃபிஷரை ஒரு மாடியிலிர்ந்து தள்ளிவிட்டு சாவடிக்கிறாள்.நான்காம் நிலையில் செத்தால் எங்கே எந்திரிப்பான்? அதே , அதே! மூன்றாம் நிலையில் எந்திரிக்கிறான் , ஒரு வழியாக தலைக்குள் சிந்தனையை விதைக்கிறார்கள்.அர்டேனும் மரித்து மூன்றாம் நிலைக்கு போகிறாள்.இங்கே இவர்கள் இறந்து அடுத்து இரண்டாம் நிலையில் ஆர்தர் லிஃப்ட்டை வெடிக்க செய்து சாவடிக்கிறான் , ஆக முதல் நிலையில் விழிக்கிறார்கள்.


இப்பொழுது தான் முதல் சீன் வருகிறது , சைட்டோவிற்கு வயதாகி விடுகிறது காரணம் அவன் லிம்போவில் இருக்கிறான்.தான் லிம்போவில் இருப்பதை உணர்ந்து கொண்டே காப் அவனிடம் செல்கிறான்.நாம் கனவில் இருக்கிறோம் என்று சொல்லி சாவடித்துக்கொண்டு நிஜத்துக்கு திரும்புகிறார்கள் , இமிகிரேஷனில் பிரச்சனையில்லாமல் வீடு சென்று தன் குழந்தைகளை காண்கிறான் காப்.

கடைசி காட்சியில் டோட்டம் சுத்துகிறது , நிஜமா கனவா என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு விடப்படுகிறது.


நோலனின் இந்த படம் படைப்பு என்னும் பட்சத்தில் தனிப்புதுமையுடைய ஒன்றாகவும் , அதீத நேர்த்தியுடைய ஒன்றாகவும் பாராட்டப்படும்.இதில் நான் கதையில் இருக்கும் சில கேள்விக்குறிய அம்சங்களை சொல்லாமல் , பொதுவான ஒரு கதையை தான் எழுதியிருக்கிறேன்.இந்த கதையை அறிவியல் புனைவாக அல்லாமல் ஒரு காதலனின் ஏக்கமாகவும் ஒரு தந்தையின் பாசமாகவும் பார்க்கலாம்.தான் கற்ற அறிவியல் தன் மனைவின் உயிரை பலி வாங்கும்போதும் சரி , தன் குழந்தைகளின் முகத்தை தன்னால் பார்க்க இயலாமல் போகும்போதும் சரி , டீ காப்ரியோ பிரமாதமாக நடித்தியிருக்கிறார்.தனது காதலியை நினைவில் சிறை வைத்துவிட்டு உண்மையை மறக்க நினைத்து தோற்கும் ஒரு காதலனின் கதையாக இதை பார்க்கிறேன்.எப்படியாயினும் இதன் நேர்த்திக்கு கண்டிப்பாக பார்க்கலாம்.



Friday, June 11, 2010

பிட்டோகோரஸ் தியரம்


சரியாக நினைவு இருக்கிறது , நான் பத்தாம் கிளாசில் தான் பிட்டு முதல் வாதத்தை கடைபிடித்தேன்.இந்த பொருள் முதல்/கருத்து முதல் வாதம் போல் பிட்டு முதல் வாதம் கஷ்டமில்லை.எளிதாக புரியும் மொழி நடையில் நாமளே எழுதிக்கொள்வது தான் பிட்.

நான் பத்தாம் கிளாசில் எல்லாம் அம்புட்டு தைரிய சாலி இல்லை ( இன்றளவிலும் இல்லை தான்) ஆனால் எங்களுக்கு வழக்கமாக எடுக்கும் புவியியல் ஆசிரியை நீண்ட விடுப்பு எடுத்து விட்டார் , அவருக்கு பதில் படு திராபையாக எடுக்கும் ஒரு ஆசிரியை வந்தார்.அந்த மாடெல் பரீட்சையில் ஒரு எழவும் தெரியவில்லை.அப்பொழுது மைக்ரோ செராக்ஸ் , சின்ன பிட் எல்லாம் என் பள்ளியில் அம்புட்ட்டு பிரசித்தி இல்லை.நண்பன் ஒருவன் ஓம் , பிள்ளையார் சுழி எல்லாம் போடு பெரிய நோட்டில் இருந்து கிழித்து பிட் எழுதி கொண்டுவந்திருந்தான்.எல்லாரும் எழுதி முடித்த பிறகே எனக்கு கொடுத்தார்கள் அதை.எனக்கு எழுத நேரமில்லை , அதை அப்படியே கட்டி பேப்பருடன் கொடுத்திவிட்டேன். டின் கட்டிவிட்டார்கள்.

ஆனால் நணபன் ஒருவன் படு நேர்த்தியாக பத்தாம் கிளாசிலேயே பிட் அடிப்பான். வரலாற்று பாடத்தில் ஒவ்வொரு பிட்டையும் ஒவ்வொரு இடத்தில் வைப்பான்.இடம் மறந்து விட்டால்? எந்தெந்த பிட் எங்கெங்கு உள்ளது என்பதற்க்கே ஒரு பிட் எழுதுவான்.அது எங்கே இருக்கும் என்னும் செய்தியை கையில் எழுதிக்கொள்வான். இப்படியாக உலகப்போரை உள்ளாடைக்குள் வைத்த புகழ் அவனையே சாரும்.

அதன் பிறகு நான் +1,+2 ஒரு ஜெயிலில் படித்தேன் அங்கே இதுக்கெல்லாம் கசையடியில் இருந்து அனைத்து அநாகரீக தண்டனைகளும் உண்டு.அதற்கு பயந்தே அடிக்கவில்லை.

என் கல்லூரியில் ஜீவிக்க ,காற்று , நீர் , சாப்படு , தங்குமிடம் போல் பிட் அடிப்பது ஒரு இன்றியமையாத விஷயம்.முன்னாடி இருந்தவர்களி பற்றி தெரியாது , ஆனால் நான் படித்த 4 ஆண்டுகளில் எனக்கு தெரிந்து ஒரு வகுப்பில் ஒன்றிருவரை தவிர அனைவரும் அடிப்பார்கள் என்றே சொல்லலாம்.

பல நேரங்களில் வகுப்பில் அனைவருமே ஒரே பதில் எழுதி ஆசிரியரை மண்டை காய வைத்திருக்கிறோம்.நம்க்கு தெரிந்த பதிலை கேள்விதாளில் எழுதி விடலாம் , அடுத்தவனிடம் அவனுக்கு தெரிந்ததை எழுதசொல்லி மாற்றிக்கொள்ளலாம்.பிட் பேப்பரை பார்த்து சந்தேகப்படுகிறார்களா? முந்தய கேள்விதாளில் பிட் எழுதி ,அதை எடுத்துக்கொண்டு போய் விடலாம். பார்ப்பவர்கள் நாம் கேள்வித்தாளில் விடை எழுதி பழகியதாக நினைப்பார்கள்..கொஞ்சம் படித்து கொஞ்சம் பிட் எழுதுதல் நலம். இல்லாவிடின் காலை பரீட்சைக்கு மதியத்தில் எழுத வேண்டிய பதிலை எழுதும் அபாயம் உள்ளது.

நிற்க.

பிட் அடிப்பது சரியா தவறா? இது அறிவு திருட்டு இல்லையா? நம்மிடம் இல்லாத அறிவை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு நேர்மையற்ற செயல் தான்.இந்த கேள்விக்கு என்னிடம் விடையே இல்லை. இங்கே நான் முதுகலையில் பல திறந்த புத்தகம் பரீட்சைகளை எதிர்க்கொள்கிறேன்.பார்த்து எழுதவது என்னும் தேவையே இங்கே இல்லை.இந்திய கல்விமுறையில் அப்படியா என்ற கேள்விக்கு பொதுவான விடை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.ஆனால் என் கல்லூரியை வைத்து என்னால் தீர்க்கமாகவே பேச முடியும்.ஒரு ஐம்பது எண்களை கொடுத்து இந்த கனிமத்துக்கு இந்த எழவு குனம் இதை மொன்னைத்தனமாக மனப்பாடம் செய் இதை இப்படியே எழுது போன்ற கேள்விகள் உலக நாடுகளில் எங்கேனும் கேட்கப்படுகிறதா என தெரியவில்லை.பெரும்பாலுமான சூத்திரங்கள் பெரியது , சமன்பாடுகள் பல்லை உடைக்க கூடியது நடக்கும் தொழில்நுட்பங்கள் தேர்ந்த அனுபவத்தால் மட்டுமே மனதில் நிற்க கூடியது , இதை அனைத்தயும் நினைவில் நிறுத்து பின் வாந்தியெடு என்னும் அதிகாரத்தனமான கேள்விகள் கல்விமுறையை அதள பாதாள்த்துக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டுவை.

அறிவு நேர்மை இருப்பது அவசியம்.அதனினும் அவசியம் அதை உருவாக்கும் கல்வி முறை என்று நினைக்கிறேன்.இதை நான் முடிவாகவோ நியாயப்படுத்தவோ எல்லாம் சொல்லவில்லை.இப்படியான பாடத்திட்டம் இருக்கும்வறை இது ஏதோ ஒரு வழியில் நடக்கும். மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்பது போல் ஒரு சூழலில் எல்லாரையும் தள்ளிவிட்டு தப்புசெய்யதூண்டும் ஒரு விஷயத்தை மறுபரிசீலனையாவது செய்ய வேண்டும்.

Wednesday, June 9, 2010

குறுமலாப்பேரி கிரிக்கெட் டீம்

அன்றைக்கு என்று பார்த்து உச்சி வெயில் மண்டையை பிளந்தது என்று சொன்னால் அது பொய்யாகிவிடும் ,என்றைக்கும் போல் அன்றைக்கும்.ஆனால் குறுமலாப்பேரியில் காற்றுக்கு பஞ்சமே கிடையாது.சில்லென்று முகத்தில் அடிக்கும் , மூட்டையை சைக்கிளில் கொண்டு வரும் காளி அண்ணன் இதுக்கென்றே சில நேரம் எதிர் காற்றில் கூட வண்டி ஓட்டுவதுண்டு.

காத்து தெக்க பாத்து தாம்ல அடிக்கு , அப்ப்றம் ஏன் ஸ்டிக்க அங்குன கொண்டு போய் நடுத? என்ற கூப்பாடோடு வந்தார் அண்ணன் குமார் , கேப்டன் குமார் , கடுதக் குமார்.கடுதக் என்றால் என்ன என்று இன்றளவும் யாருக்கும் தெரியாது .

எலே செத்த மூதி சாரம் கட்டி ஆட வராதன்னு எத்தனை தடவைல சொல்ல , நாளைக்கு மேட்சாட வரலையோ டே? என்றான் விக்கட் கீப்பர் பிரியன்.

சாரம் கட்டி தானடே கீழப்பாவூர்ல மணியன்னே பேட்டிங் புடிச்சாப்புல , அவுக கப் வைக்காங்கன்னா அவுக மட்டும் சாரம் கட்டி ஆடலாமோ , பிராக்டிஸ் தாண்டே இது.ஸ்டிக்க நட்டாச்சு டீம் பிரிங்கடே.

டீம் பிரிப்பது அசாதாரனமான விஷயம்.அங்கே இருப்பவர்களில் இரண்டு சிறுசுகளைதான் எப்பொழுது பிரிக்க சொல்வார்கள்.இரண்டு பேரும் முதலிலேயே காட்டானை எடுக்க துடிப்பார்கள்.காட்டான் சூப்பர் ஃபாஸ்ட் குறுமலாப்பேரி எக்ஸ்பிரஸ்.பந்தை பள்ளிக்கூட கிரவுண்டில் தூக்கி அடித்து தொலைத்த ஒரே ஜந்து அவன் தான்.அதன் பிறகு மணி , முப்பிடாதி , சசி , சோலை , மருது , வெள்ளைச்சாமி , வேல்ப்பாண்டி,இப்படி கடைசியில் குமார்.குமாருக்கு பேட்டிங் வராது , பவுலிங்க சுத்தம்.இது வரை ச்லிப் கேட்ச் மட்டும் அவர் எடுத்ததில்லை , சிலிப்பை தவிர எங்குமே நிக்க மாட்டார் உருவம் அப்படி.கேப்டன் எப்படி? ஏனென்றால் பார்ட்டி டப்பு பார்ட்டி. கப் நடத்த , நுழைவுக்கட்டனம் கட்ட ,ஸ்டிக் வாங்க , பேட் வாங்க , வாட்டர் பாக்கெட் வாங்க , குச்சி ஐஸ் வாங்க எல்லாவற்றுக்கும் அந்த ஊரில் காசு கேட்டார்கள்.குமாரிடம் இருந்தது.

நாளை நடக்கப்போகும் செமியில் தான் குறுமலாப்பேரி வெர்ஸஸ் கீழப்புலியூர்.இன்னொரு செமியில் மேலப்பாவூர்/சுரண்டை.எப்பொழுதுமே கப் நடத்துபவர்கள் ஃபைனல்ஸ் வருவார்கள்.ஆக செமியில் ஜெயித்து வருபவர்கள் கண்டிப்பாக திரும்பி தங்களுக்குள் மோதிக்கொள்ள் வேண்டும்.அப்போ என்ன எழவுக்கு செமின்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்கப்புடாது!

ஏ பந்த தேடுறே , எவ்வளவு நேரம் அங்கனையே நிப்ப , இது சசி.

ஏல் நொட்டி , பேசுதேல்ல , ரப்பர் செருப்புதாம்ல போட்டிருக்கேன் அடிச்சேல்ல , வந்து எடுத்துக்குடு என்றான் முப்பிடாதி.

அன்று ஒருவழியாக இருந்த ஒரு பந்தையும் வெற்றிகரமாக தொலைத்து விட்டதாலும் , பாலாஜி அண்ணன் கடையில் இதுக்குமேல் ரப்பர் பந்து இல்லாததாலும் ஆட்டை நின்று போனது.செமி போவதர்க்குண்டான ஸ்ட்ராடஜி பேச்சுக்கள் ஆரம்பமானது.

ஏ காட்டான் அன்னிக்கு மாதிரி விசுறாதே டே விக்கெட் வேனும் , நீ எல்லா பந்தையும் வெளிய அடிக்க பார்த்தேன்னா அப்பறம் ஸ்டிக் புட்டுக்கும்.அன்னிக்கி புட்டுக்குச்சு பார்த்தீயளா சத்திரம் புவலிங்கில ஹா ஹா என்று கடியில் இருந்த காட்டானுக்கு வெறியேத்தினான் வேல்ப்பாண்டி.

ஏல் அவன் எறிஞ்சாண்ட்டே சத்தியமா சொல்லுதேன் , நீ அம்பயர் அண்ணன் கிட்ட வேனும்னாலும் கேட்டுப்பாரு , அன்னிக்கு காலேஜ் படிக்கில்லா சங்கர் அண்ணே அதான் நின்னுச்சு.

கடுதக் , புரோட்டா கடை தொரந்திருக்கோடே? என்றான் வெள்ளை. நீ காசு வெச்சிருந்தா தொரந்திருக்கும்டே என்று இன்று கடுதக்கிடமிருந்து உஷார் பதில் வந்தது. பல வயிறை புரோட்டா போட்டு நிறப்பிய வள்ளலவர்.

ஏ ஒன்னும்மில்லடே புலியூர்ல மணி , சிங்கமுத்து , தொரை ,மாடு நாலு பேர் விக்கட் எடுத்துட்டா போதும் என்று சசி சொல்லிமுடிப்பதற்குள் வேல் கத்த ஆரம்பித்தான் , ஏல் மாடு என்ன விளையாடினான்? போன கப்புல எல்லாம் கீப்பர் கேட்ச் , அம்சமா எடுக்கலாம்டே நிக்க வெச்சு. ஏல் காட்டன் ஆஃப்ல நாலு பந்தாவது போடு ஃபர்ஸ்ட் ஓவர் எல்லாமே காலுக்குள்ள எறக்க பாக்காத.

ஏ மணி , கிட்ட வந்தி நில்லுடே , சிரிலங்கால எல்லாம் நிப்பாங்க தெரியுமா பாஸ்ட்ட்கே நிப்பாய்ங்கடே.


ஏல் அவன் எம்புட்டு ஏறியுதான் தெரியுமா? கீப்பிங்க் நிக்கியா நீ? பேசனும்னு பேசாத , ரப்பர் பந்துனாலும் பட்டா வலிக்காதோல உனக்கு?

சரிடே நான் சிலிப் நிக்கேன் இந்த வாட்டி , போன வாட்டியே குமார் அண்ணே மூனு காட்ச் மிஸ் பன்னிட்டாப்புல என்றான் முப்பிடாதி.

முப்பிடாதி , நீ கேட்சே விட்டதில்லயோ டே? ராஜா பவுலிங்கில லாங்குல விட்டியே டே போன ஃபைனல்சுல

கடுதக் , ராஜா போன ஃபைனல் விளையாடவே இல்லை என்று மேலும் வெந்த புல்லில் ஆசிட்டை ஊற்றினான் முப்பிடாதி.சிறிது நேரம் மவுனம்.குமாருக்கு கோபமோ என்று உள்ளூர வெள்ளைக்கு பயம் , புரோட்டாக்கு பங்கம் விளைவித்த முப்பிடாதியை கருவிக்கொண்டான்.காட்டான் மவுனத்தை கலைத்தான்.

கொடுக்கமாட்டாங்கடே கீழப்பாவூர் காரைங்க அவ்வ்ளவு சீக்கரம் கீப்பர் கேட்ச் ,அம்பயரிங்கிலையே நம்ம்ள தொரத்த பாப்பய்ங்க.நம்ம ஃபைனல் வந்தா டஃப் அவங்களுக்கு.

சுத்தி இருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்தது.சரி இருந்தாலும் காட்டான் மனசு நோக வேண்டாமே என்று விழுந்து விழ்ந்து சிரித்தார்கள்.

டேய் என்னடே குறைச்சல் சொல்லுடே ஒருத்தன் சொல்லுடே , ம்ம் ஹ்ம்ம் சிரிப்பொலி நிக்க வேண்டுமே

Saturday, June 5, 2010

பிராஹாவில் கோயிஞ்சாமி


உங்களில் யார் செய்த பாவமோ எனக்கு எழுத நேரம் கிடைத்திருக்கிறது.

வார்சாவில் நிறைய விடுமுறை நாட்கள் உண்டு.அது போக நான் கல்லூரி இருக்கும் திசைக்கு மாற்று திசையில் தான் இந்த ஆறு மாதம் தலையனையை வைத்து படுத்தேன்.மே மாத விடுமுறையில் ( அது என்ன மே மாத விடுமுறை? அதெல்லாம் தெரியாது , விடுமுறை அய்யா) என் வகுப்பில் எட்டு பேர் செக் நாடுக்கு செல்வது என முடிவானது , நான்கு ஆண்கள்.மிச்சம் நான்கு பெண்கள்.விகிதாச்சாரம் தானாக மட்டுமே அமைந்தது!

போகும் பொழுது ஒரு பாதி வித் அவுட்டில் போனோம் , வண்டியில் இருக்க இடம் உண்டு ஆனால் அமர அல்ல.முதலில் பப்பரப்பே என்று உக்காந்தாச்சு. பிறகு டிக்கட் வாங்கிய ஒருவர் மாத்தி ஒருவராக வந்து எழுப்பிவிட ஆரம்பித்தனர்.கடைசியில் இரண்டு இருக்கையில் ஐந்து பேர் சமாளித்து போலந்தில் எல்லை வரை வந்து விட்டோம்.ரயிலில் நகர இடமில்லை.கடைசியில் போலந்து எல்லையில் இருந்து செக் தலைநகர் ப்ராஹாவிர்க்கு வேறு ரயிலில் தாவிக்கொண்டு போனோம்.


உண்மையில் பிராஹா எழில் கொஞ்சும் நகரம்.முதலில் நாங்கள் போனது பிராஹா கோட்டைக்கு , உலகிலேயே மிகப்பெரிய கோட்டையாம்.பசி வயிற்றை கிள்ளியதால் அதை அடுத்த நாளுக்கு வைத்துவிட்டு வந்துவிட்டோம்.மதியம் பழைய நகரம் , புதிய நகரம் என்று அனைத்து இடத்தையும் சுத்தி காட்ட ஒரு கைட் கிடைத்தார் , இலவசமாக! பிரித்தானிய ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவமாடியது.வரலாறு , கலை , இலக்கியம் என அனைத்தையும் பிரித்து மேய்ந்தார்.

அவர் சொன்னதில் இரண்டு முக்கியமாக பட்டது , ஒன்று வென்செலாஸ் சதுரம் இன்னொன்று யூத கல்லறைகள்.வென்செலாஸ் சதுரத்துக்கு ஒரு வரலாறு உண்டு.1969இல் ஜான் பலாக்ஸ் என்னும் மாணவர் நம் முத்துக்குமார் போல் தன்னையே தீக்கு இரையாக்கினாராம்!

1968க்கு பிறகு டூப்செக் செக் குடியரசுத்தலைவராக இருந்த காலம் பிராஹாவின் வசந்தமாம். அவர் குடிமக்களுக்கும் , பத்திரிக்கையாளர்களுக்கு பல சுதந்திரம் அளிக்க ஆரம்பித்தார்.இன்னும் பத்து ஆண்டுகளில் கம்மியூனிச ஆட்சி முறையில் இருந்து விலகி ஒரு முழு ஜனநாயகத்தை நோக்கி நகர்வோம் என்னும் பிரகடனம் வைத்தார்.நாட்டு மக்களிடம் மிக நல்ல வரவேற்பு இருந்தது.சேதி தெரிந்த உடன் சோவியத்திலிருந்து டேங்க்குக்ள் உருள ஆரம்பித்து விட்டதாம்! இதை எதிர்த்து தான் அறவழி போராட்டத்தில் ஜான் பலக்ஸ் மற்றும் ஜான் சஜிக் என்னும் இரண்டு மாணவர்க்ள் தங்களையே சாம்பலாக்கிக்கொண்டனர்.

அதன் பிறகு சார்லஸ் பிரிட்ஜ் மற்றும் பல இடங்களில் நான் தன்னந்தனியாக சுத்தி திறிந்தேன். ஒருவர் வித்தியாசமான வாசிப்பு கருவியில் உலகத்தர இசையை கொடுத்து கொண்டிருந்தார் , மற்றொரு பக்கம் நம்மூர் பொம்மலாட்டம் போல் ஒரு கலை.அதையும் ரசித்து கண்டுகளித்து விட்டு வீடு திரும்பினேன்.அடுத்த நாள் எல்லோரும் கோட்டை போக அடம் பிடித்தார்கள் ,அந்த புன்னியவான் கோட்டையை எஙகயோ உச்சியில கட்டி வெச்சிருக்கான் , எனக்கு ஏறுவதர்க்குள் டவுசர் கழண்டுவிட்டது.நண்பன் ஒருவன் மட்டுமே ஒரு மூச்சில் ஏறினான்.அட என்று அடுத்ததாக நான் ஏறி பக்கத்தில் போனால் கைத்தாங்கலாக் புடியேன் என்றான் , சரி அவனும் தான் எவ்வள்வு நேரம் வலிக்காத மாதிரியே நடிப்பான்.

ஒரு தெரு முழுவதும் ஷாப்பிங்கிற்கென ஒதுக்கியிருந்தார்கள் , செதேன் தொலைந்தேன் என்று வேறு இடம் ஓட ஆரம்பித்தேன்.அங்கே நின்றவர்கள் கடைசியாக கொடுத்த ஆய்வறிக்கைப்படி அங்கே மட்டுமே நான்கு மணி நேரமாம்.முந்தய தினம் யூத கல்லறைகள் பற்றி கேள்விபட்டபடியால் அங்கே போக நினைத்து வழிகண்டுகொண்டு போனேன்.ஒரு சுவர் அது முழுக்க நுனுக்கி நுனுக்கி எழுதபட்ட பெயர்கள் சுவரையே பல நூறு பெயர்கள் மறைத்தன. இது போல் பல சுவர்கள் ,இரண்டு அறை முழுவதும்! அனைத்தும் நாஜிக்க்ள் படுகொலை செய்யபட்ட யூதர்களின் பெயர்கள்.

நாஜி வதைமுகாம்களில் இருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்காக வைக்கபட்டிருந்தது.ஒவ்வொன்றிலும் ஒரு வித செய்தி , வெறுமை. பெரும்பாலான குழந்தைகள் மனபிறழ்வு உடையவர்களாம். அங்கே ஒரு குழந்தை ”ஷவர்” காட்சியை ஓவியமாக்கியிருந்தது , அது என்ன என்று "Life is beautiful" படம் பார்த்தவர்களுக்கு தெரியும் .இதயம் கணக்க வெளியேறினேன்.


அடுத்து செஸ்கி குர்ம்யோவ் என்ற சின்ன நகரத்துக்கு பயணமானோம்.அநியாயத்துக்கு அழகு , ட்ரெட்லின்க் என்று ஒரு செக் உணவு வைக உண்டு , ரசித்து அனைவரும் சாப்பிட்டோம்.இது போக எனக்கு கோடுலிச் என்று ஒரு வகை பிரட்டும் மிகவும் பிடித்திருந்தது.நதிக்கரையோரம் அந்த கால செக் உணவு வகைகள் கொடுக்கும் உணவகத்தில் சாப்பிட்டோம்.சைவமே ஆனாலும் மிக வித்தியாசமான ருசி.க்ரும்யோவின் அழகு எளிதில் வார்த்தைகளில் சொல்ல முடியாது ,பல வயதான கொரிய சீன தம்பதிகளை பார்த்தேன்.சில முக்கியமான புத்துகங்கள் வாங்கினேன்.ஃப்ரான்ஸ் கஃப்காவின் சிலையை அங்கே பார்த்தும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விபட்டிருந்தும் அவர் புத்தகம் எதுவும் வாங்கவில்லை.

வெளியேறிய பொழுது ஜான் சாஜிக்கின் வாசகம் ஒன்றை காண நேர்ந்தது

But I want a lot for you, for everyone, so I have to pay a lot. Do not lose your heart after my sacrifice, tell Jacek to study harder and Marta too. You must never accept injustice, be it in any form, my death will bind you. I am sorry that I will never see you or that, which I loved so much. Please forgive me that I fought with you so much. Do not let them make me a madman.

Say hi to the boys, the river and the forest

Friday, February 12, 2010

விண்வெளி வீரரின் அசகாய சாகசங்கள்


இது முழுக்க முழுக்க கற்பனை பதிவு.இப்பதிவில் இருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கற்பனையே.தப்பி தவறி நீங்கள் சம்பந்தம்படுத்தி கொண்டால் நான் அதற்க்கு பொறுப்பில்லை.

விண்வெளி வீரர் என்ற பெயர் இவருக்கு வர என்ன காரணம் என்பதை நானறியேன். விவரம் அறிந்தவர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.

விண்வெளி ஒரு பிரபல ஆராய்ச்சி கூடத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி.இவரை ஞான குருவாக ஏற்று கொண்டு கோடிக்கணக்கான மாணவர்கள் உலகெங்கும் இருக்கின்றனர் .

வகுப்பறையில் அவர் பாடம் நடத்த அனைவரும் நித்திரை கொள்ளும் வேளையில் திடுமென எல்லாரையும் ஒற்றை சொல்லாடலில் எழுப்பினார்.

எதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார், ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் தனது செய்கைகளில் உள்ள குளறுபடியால் Shipping turn over ஐ இழந்துவிட்டது என்றார். சரி தான் என்று மீண்டும் நித்திரைக்கு போவதற்குள் அதற்க்கு ஞான குரு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் "தம்பி அந்த கட்டுமான கம்பனி தனது கப்பலை சரியாக கரையில் நிறுத்தி வைக்கவில்லை.ஆதாலால் அதை ஸ்டியரிங் போட்டு திருப்பையில் பிரச்சனை இது தான் Shipping turn over problem" என்றார்

அந்த மாபெரும் ஆராய்ச்சி கூடம் இவரின் அறிவை பயன்படுத்திக்கொள தவறவிட்டதற்கு இன்னொரு உதாரணம்.நாம் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியலில் Scanning electron microscope (SEM) என்று ஒன்றை படித்திருப்போம். சின்னது எதுவோ அதை பெருசாக பார்க்கலாம் என்ற ரத்தின சுருக்கமாக அதற்க்கு ஞான குரு முதலில் விளக்கமளித்தார் .


ஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்பதற்கு ஒரு கதை சொன்னார்.நாம் படிக்கவேண்டிய ஒரு பெரிய விஷயத்திற்கான சாம்பிளாக அதில் இருந்து சின்னதாக பெயர்த்தெடுத்து கொடுத்தால் தான் அதை அந்த கண்ணாடி வழியாக பார்த்து ஆராய முடியும் என்று யாரோ சொல்லிவிட்டார்களாம்.சரி என்று கான்கிரீட் கட்டிடங்களை ஆராயும் இவர் அதிலிருந்துஒரு செங்கலை பெயர்த்தெடுத்து கொண்டுபோய் கொடுத்தார்.அரண்டு போன ஆராய்ச்சியாளர்கள் ஒருவாரம் விடுமுறை எடுத்து வேப்பிலை அடித்துக்கொண்டதாக தகவல்.


இன்றளவிலும் யாருமே இல்லாத தெருவிற்குள் இன்டிகேடர் போட்டு செல்லும் ஒரு சிடிசன் இவர்.தூங்கும்போது மட்டுமே ஹெல்மெட்டை கழட்டுவார் என்பது தனி சிறப்பு.

மதிப்பெண் வழங்குவதில் மட்டும் ஏனோ ஏக கறாராக இருப்பார் .இவர் சாப்பிடும் எக்ஸ்ட்ரா இட்லியை கண்டுக்கொள்ளாத மெஸ் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு கூட கம்மியான மதிப்பெண்களே அளித்து வருபவர் .திருப்பூரிலிருந்து பனியன் , திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் சிறப்பு ஜெயின்சன் வேட்டிகள் அளிப்பவருக்கு மட்டும் போனால் போகிறது என்று முன்னுரிமை கொடுத்து நேர்மைக்கு இலக்கனாமாக திகழ்பவர்.

ஞான குருவுக்கென்று ஒரு சிறப்பான சீடன் உண்டு அந்த சீடனின் வீட்டுக்கே சென்று பங்குசந்தையை பற்றி தனது விரிவான அறிவை பகிர்ந்திருக்கிறார்.எப்படிப்போட்டால் காசை லாவகமாக இழக்கலாம் என்று இவர் சொல்லியிருக்கும் விஷயங்களை புத்தகமாக கொண்டுவரும் முயற்ச்சி நின்றுபோய் இன்று தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இவரது சாகசங்கள் பதியப்பட்டு வருகின்றன.

ஆங்கில புலமையை பற்றி அடிக்கடி பேசி நம்மை மூர்ச்சை அடைய வைப்பார்.வேலை கிடைக்காமல் போவதற்கே மாநாக்களிடம் இருக்கும் ஆங்கில அறிவின் போதாமை தான் காரணம் என்றார் .நீங்கள் வேலைக்கு சேரும் கம்பெனியில் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று ஒரு நாள் வினவினார் ,சீடன் எழும்பி "Package" என்றான்.இப்படி சிறிய வயதிலேயே packaging கம்பனிக்கு போவேன் என்று நீ அடம்பிடிப்பது நல்லதில்லை என்றார்,குருவே என்று பொற்பாதங்கள் தொட்டு வணங்கினான் சீடன்.

இதுபோக இவரது ஆராய்ச்சி கூடத்தில் இதுகாலம் வரை இவரை பார்த்தவர்கள் அனைவரும் இவர் அனந்தசயனத்தில் இருக்கும்போதே பார்த்திருக்கின்றனர்.இவர் கண்விழிக்கும் நேரமெல்லாம் தேனீர் இடைவேளையாக இருப்பது விஞ்ஞானத்தால் விளக்க இயலாத ஆச்சரியம்

இதுபோல் குருவின் இன்னும் சில சாகசங்களை தொகுக்க அவரது சீடர்களிடம் உதவி நாடியுள்ளேன்.வந்ததும் தொகுக்கிறேன்.படிச்சிட்டு சாவுங்க